ஞாயிறு, 23 நவம்பர், 2014

மழைக்காலத்தில்... பசுமை நடை - 42 ... மீனாட்சிபுரம் (மாங்குளம்)

நேற்று இரவும் பெய்த மழை காற்றிலும் தக்க வைத்திருந்த குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டே மாட்டுத்தாவணியிலிருந்து கிளம்பினோம். மணி ஏழைத் தொட்டிருந்தது.தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் பயணிப்பது வழக்கம் போல பிடித்தமான விஷயம். வலது புறத்தில் மனம் போல விரையும் வண்டிகள், இடது பக்கம் பசுமையின் ஊடே சில ஊர்களின் நுழைவுப் பாதை, அபூர்வமாக தென்படும் குட்டிக் கோவில்கள், சில இடங்களில் தேநீர்க்கடைகள்...... இறுக்கமாக ஒட்டிக் கொண்டது உற்சாகம். வெள்ளை நிறக்கோடு பளீரிட்டு முன்னே இழுக்க, கோட்டில் ஏற்றி செல்வதும், சில நொடிகள் கோட்டுக்குள்ளே செல்வதுமாக மாறி மாறி தொடர்ந்தது. இது மாதிரி சாலையில் சற்று கூடுதல் வேகத்தில் சீராக பயணித்ததில், பெட்ரோல் மிச்சம் பிடித்துவிட்டோம் என அல்ப சந்தோசம் ஏற்படும். :) 

டோல் கேட் வருவதற்கு முன்னால் உள்ள வளைவில் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. கிட்டத்தட்ட 10 கிமீ க்கு அப்பால், ஏறிச் சென்ற ஒரு பாலத்தின் இடது புறம் சென்று ஓரத்தில் நின்றோம்.  தனித்தனியாக வந்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதன் பின் அங்கிருந்து இடது புற சாலையில் திரும்பினோம். மழையின் கனிவால் சூரியனும் இதமாய் ஸ்பரிசித்தது. முன்னே விரிந்த சாலையில், இரண்டு பக்கங்களும் பசுமையான வயல்வெளி மலைப் பின்னணியில் கம்பளம் விரித்து வரவேற்றது. எதிரில் வண்டி எதுவும் வராமல் இருக்க  எளிதாக முன்னேறி சென்று கொண்டே இருந்தோம். 3,4 கி மீ க்கு பிறகு வலதுபுறம் திரும்பினோம். உள்ளே நீண்ட மண் சாலை தண்ணீர்த் தேங்கிய ஏகப்பட்ட பள்ளங்களுடன் அழைத்தது. வேகத்தைக் குறைத்து, மெது மெதுவாக சென்றோம். இடது புறத்தில் தெரிந்த நிறைந்த கண்மாய் கண்களை நிறைத்தது. வழி எங்கும் மரங்கள், கள்ளழகர்க்கு குடைப்பிடிப்பது போல குடைப்பிடிகின்றனவோ என தோன்றியது. தண்ணீரையும், மரம், செடி கொடிகளையும் ரசித்துக் கொண்டே, பள்ளங்களுக்கு ஏற்ப வேகத்தையும் மிக மெதுவாக சென்றதில், மிச்சம் பிடித்த பெட்ரோலை சமன் செய்திருப்போம். :)  

கிட்டத்தட்ட 3 கிமீ கழித்து பிரிந்த இரண்டு சாலைகளில், இடது புறம் திரும்பி ஒரு கோவிலின் முன் கிடைத்த இடங்களில் வண்டிகளை ஒழுங்காக நிறுத்தி விட்டு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு இடத்தில் இருந்து பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு விதமாக காட்சி தரும் மலை, கொடுப்பது என்னவோ ஒரே விதமான ஆனந்தத்தை மட்டுமே. ஊருக்குள் சில தெருக்களைக் கடந்து, சிறு வெளியையும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டே நடந்த சில நிமிடங்களில் செடிகள் சூழ பிரம்மாண்டமாக நின்ற மலையில் கால் வைத்தோம்................ மழைக்காலத்தில் பாறையின் அழகு கூடி, குளிர்ச்சி ஏறி இருந்த மலை எங்கள் பாதங்களை இழுத்து ஏற செய்தது. 

மலையில், சுக்குநாறி என்ற ஒரு விதமான புல் காணும் இடத்தில் எல்லாம் முளைத்து இருந்தது. ஒன்றை பிய்த்து முகர்ந்தால் சுக்கும், எலுமிச்சையும் கலந்த அற்புத மணம். நடக்கும் இடங்களிலும் முளைத்த புற்களில், எங்களின் பாதங்கள் அழுத்தியதால் உருவான விஷேச மணம் பயணம் முழுவதும் உடன் இருந்தது. இது தான் இப்படி தான் என்றில்லாமல், பெரிதும், சிறிதுமாக, உனக்கென்ன, எனக்கென்ன என்பது போல இருந்த குட்டி குட்டிப் பாறைகள், எங்கே, எங்க மேல ஏறிப்பாருங்க என்பது போல சவால் விடும் சரிந்த பாறைகள்  பாதையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்திருந்தன. பாறைகளின் குணமும், நிறமும் இந்த ஒன்றரை வருட பசுமை நடையில், பாதங்களுக்கு ஓரளவு புரிபட ஆரம்பித்திருக்கிறது. மலையைக் கண்டு பிரமித்தாலும், நடக்கும் பொழுது மலைக்காமல் ஏறி இறங்க முடிகின்ற அளவு மலையுடன் நட்பு வலுவடைந்திருக்கிறது. :) 

நடந்து, ஏறி... ஏறி, நடந்து என வந்து சேர்கிறது முதல் படுகை. இங்கு ஐந்து குகைத்தளங்கள் உள்ளன. முதலில் சென்ற தளத்தில் காடி வெட்டப்பட்டு மழை நீர் வடி விளிம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தனை மழை பெய்தாலும், உள்ளே இருந்த சமண துறவிகள் பாதுகாப்பாக இருக்க எத்தனை அருமையான ஏற்பாடு செய்துள்ளனர். கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் ஆறு தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. நெடுஞ்செழியன் என்ற சங்ககாலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. 

கணிய் நந்தஅ ஸிரிய் இ குல் அன்கே 
தம்மம் இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன் 
கடல்அன் வழுத்திப் கொட்டு பித்தஅ பளி இய் . என்பது முதல் கல்வெட்டில் கூறப்படும் செய்தி. நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு இப்பள்ளியையும், கற்படுகைகளையும் வெட்டிக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. - இது போன்ற பல தகவல்களை பேராசிரியர் கண்ணன் பகிர்ந்து கொண்டார். 

திறந்த வெளி வகுப்பறை - பசுமை நடையின் ஒவ்வொரு நடையிலும் மலைகளில் அமர்ந்தபடி, ஆகாயம், சூரியன், சற்று தொலைவில் நீர்நிலை, மரம் செடிகள் பார்க்க, அந்த இடங்களின் முக்கியத்துவத்தை சுவாரசியமாக காதில் கேட்க வாழ்நாள் முழுவதும் உடன் வரும் பாடமாக மனதில் பதிகிறது. வகுப்பு முடிந்து கீழே இறங்க ஆரம்பிக்கையில் கூடுதல் கவனத்துடன் நடக்க செய்தன பாறைகள். ஆங்கங்கே பதித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், நடையை எளிதாக்கவும், ஓரத்தில் நின்றபடியே பாதுக்காப்பாக பிடித்துக் கொண்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரசிக்கவும் உதவின. . வாட்டர் வாஷ் செய்தது போல கூடுதலாக பளிச்சிட்ட இயற்கையை சலிக்க சலிக்க கண்களுக்கு விருந்தாக்கி இறங்கினோம்.


வியாழன், 20 நவம்பர், 2014

மழை வருவதற்கு சற்று முன் ஓர் அரிசிக்கடையில்...

நேற்று மாலை அரிசிக்கடையில் கூட்டம் குறையாமல் இருந்தது. ஏழெட்டு பேர் வாங்கிய பிறகே என் முறை வரும். ஏதேதோ யோசனையுடன் காத்துக் கொண்டிருந்தேன். இருபதுக்கு பத்து என உள்ள அறையில், சொருகி வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளுடன் அரிசி மூடைகள், பிரித்து வைக்கப்பட்டிருந்தன. உள்ளே தெரிந்த அறையிலும் பல மூடைகள் பாதுகாப்பாக அடுக்கப்பட்டிருந்தன. கடையின் முகப்பில் ஐந்தாறு பேர்கள் தான் நிற்க முடியும். கேட்கும் ரகங்களை சின்னக் கிண்ணத்தில் அள்ளிக்கொண்டு வந்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே கடை எங்கும் தூசியுடன் சிந்தி சிதறிக் கிடக்கும் இரண்டு கிலோவிற்கு மேற்பட்ட அரிசியில் எல்லாம் யார் பெயர் எழுதப்பட்டிருக்கும் என யோசித்துக் கொண்டே இருந்தேன். 

ஆரம்ப காலத்தில் 25 கிலோ எடையை தாங்கிய அரிசிப்பை தான் வாங்கிக்கொண்டிருந்தோம். இரண்டு மாதங்களை நெருங்குகிற போதே அரிசியில் வண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். இத்தனைக்கும் பழைய அரிசி என கேட்டே வாங்கியும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வண்டின் வருகை தவிர்க்க முடியாததாய் இருக்கும். இதைத்தவிர்க்கவே, பத்துகிலோ அரிசி தீரத்தீர வாங்குவது வழக்கம் . 

சில நிபுணர்கள் காண்பிக்கப்படும் அரிசி வகைகளை உள்ளங்கையில் அள்ளி வாயில் போட்டு, தேர்ந்தெடுப்பதை பார்த்தேன் . வெறுமனே மெல்கின்ற அரிசியில் என்ன வேறுபாடு தெரியப்போகிறது, சும்மா வாய் அரவை போட அரிசியை மெல்பவர்கள் பால்யத்தில் தாங்கள் அரிசி தின்ற காலத்தை மீட்டெடுப்பதற்காக இருக்குலாம். :P 

வெளியே மழை வரும் போல இருந்தது. பத்திரமாக அரிசியை கொண்டு போக வேண்டும் என யோசித்தப்படி அரிசியைத் தேர்ந்தெடுத்தேன்.கொண்டு போன கட்டைப்பையைக் கொடுத்து கர்நாடகா பொன்னி அரிசியை போட சொல்லிவிட்டு, தனியாக பச்சரிசி வெண்பொங்கல் வைக்க வாங்கலாமா இல்லை பழைய அரிசியே போதுமா என யோசித்துக் கொண்டிருக்கையில், 'யம்மா, கொஞ்சம் தள்ளுங்க', என்ற குரல். அவ்வளவு நேரம் இருந்த பொறுமை காணாமல் போக சற்று குரலை உயர்த்தி, ' எவ்ளோ நேரம் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா?  நான் வாங்கிட்டு போனப்புறம் நீங்க இங்கிட்டு வந்து வாங்குங்க', என்றேன். அந்த நபரோ பொறுமையாக, ' நான் இந்த கடை ஓனர்ம்மா', என்றார். அப்பொழுது தான் கவனித்தேன், கழுத்திலும், கைகளிலும் கூடுதல் எடையில் மினுமினுத்துக் கொண்டிருந்த தங்கத்தை. கல்லாவில் இருந்தப் பையனை கவனித்த பொழுது, ' என் பையன் தான்', என்றார் புன்னகையுடன். ' இன்னைக்கு தான் இந்த கடைக்கு வர்றேன், ஆனாலும் நீங்க மொதலயே ஓனர்னு சொல்லியிருக்கலாம்', என்றதும், ' இனி சொல்றேன்', என்றார் அதே புன்னகை மாறாமல். அரிசிக்கு உரிய பணத்தை கொடுத்து, கட்டைப்பையை வண்டியின் முன்னால் வைத்து, வண்டியை ஸ்டார்ட் செய்தேன். சில துளிகள் கைகளை நனைக்க அண்ணாந்து பார்த்தேன். முகத்திலும் இரண்டு துளிகள் விழுந்தன. கண்களை மூடி ஓரிரு நொடி அனுபவித்து விட்டு, ' இந்த அரிசிக்கடை அண்ணனுக்கு தானே இது, கொஞ்சம் பொறு, அஞ்சே நிமிஷம் எங்க பேர் எழுதின அரிசியை பத்திரமா வீட்டுக்கு கொண்டு போயிருவேன்,  அதுக்கப்புறம் ஆரம்பி', என்று என் குறுகிய ஒப்பந்தத்தை மதித்த மழை வீட்டை அடையும் வரை அமைதி காத்தது. :)