ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சாவி - முதல் சிறுகதை

( என்னுடைய முதல் சிறுகதையான  'சாவி', இன்று வெளியிடுகின்ற 'மேடை' காலாண்டிதழில் வந்துள்ளது. க.சீ. சிவகுமார், அப்பணசாமி, ம.காமுத்துரை, குமாரநந்தன், ஆதிரன் இவர்களின் கதைகளுடன் என்னுடைய சிறுகதை வந்திருப்பதில் பெருமிதம் கலந்த மகிழ்ச்சி. :)
மேடை இதழ் பற்றிய விவரங்களுக்கு விசாகன் தேனியைத் தொடர்பு கொள்ளவும். ) 

ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் பால்யத்தில், தெருவின் குறுக்கேயும் நெடுக்கேயும் நகர்ந்து கொண்டிருக்கும் மிதிவண்டி எப்போதுமே கண்களை ஈர்க்கும். விளையாட்டை நிறுத்திவிட்டு, பெடலை மிதிக்க மிதிக்க இரண்டு சக்கரங்களும் முன்னோக்கி சுழல்வதை ஆசையுடன் பார்த்திருக்கிறேன். இரண்டு பக்கமும் உள்ள ஹேண்டில் பாரை அழுத்திப் பிடித்தவுடன், ஓட்டம் நின்று போய் நிற்கும் சைக்கிளின் மீதான பிரியம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. வீட்டிலோ உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் போது வாங்கிக்கொள்ளலாம் என உறுதியாக தெரிவித்துவிட்டனர். பள்ளிக்குப் பேருந்தில் உடன் வரும் மாலாவிடம் பார்க்கின்ற சைக்கிளை எல்லாம் ரசித்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பேன். அவளுக்கும் சைக்கிள் வாங்க வேண்டும் என கொள்ளைப்பிரியம். புதிதாக வந்திருக்கும் சைக்கிள்கள் அவற்றுக்கான விளம்பரங்கள் என சுற்றி சுற்றி வரும் எங்கள் பேச்சு. குறிப்பாக, ஈலு, ஈலு ( ilu ) என தொடங்கும் விளம்பரப்பாட்டு, ஈலுக்கா மத்லப் ஐ லவ் யூ... பி எஸ் ஏ எஸ் எல் ஆர் ... ஐ லவ் யூ', என முடியும் அந்த விளம்பரத்தை, ஏதோ மனப்பாட செய்யுளை கேட்பது போலான மரியாதையுடன் ஒளிபரப்பும் நேரத்திலெல்லாம் மிக கவனமாக ரசித்துக் கேட்போம்.

சைக்கிளைப் பற்றி பேசினால் நேரம் செல்வதே தெரியாத அளவு போய்க் கொண்டே இருக்கும் பேச்சு. நமக்கே நமக்கு என ஒரு சைக்கிள். அதன் பின்னால் உள்ள கேரியரை இழுத்துப் புத்தகப்பையை பாதுகாப்பாக வைத்து, ஹேண்டில் பார்க்கு மத்தியில் டிபன் பாக்ஸ், தண்ணீர் போத்தல் அடங்கிய மதிய உணவுக் கூடையை தொங்கவிட வேண்டும். ஏறி உட்கார்ந்து, பிடித்தமான வேகத்தில், அவசியம் ஏற்படின் மணி அடித்துக் கொண்டே பள்ளிக்கு செல்ல வேண்டும். சைக்கிள் நிறுத்தத்தில், நிழல் தேடி நிறுத்தி, பத்திரமாகப் பூட்டி சாவியை பக்கவாட்டில் உள்ள பையில் போட்டுக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாளும் சைக்கிள் மீதான விருப்பம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அரக்கு வண்ணத்தில் நிற்கின்ற பெண்கள் விடும் சைக்கிள்களைப் பார்க்கின்ற பொழுதெல்லாம் வாஞ்சையுடன் தடவிக் கொடுப்பேன். அந்த வயதில் எப்படியாவது ஒரு சைக்கிளை சொந்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதே ஆகப் பெரும் கனவாக இருந்தது.
பாட நோட்டு, புத்தகங்களில் மட்டுமின்றி கிடைக்கின்ற தாள்களில் எல்லாம் அனிச்சையாக கைகள் சைக்கிளை வரைய ஆரம்பித்தன. வாசலில் சைக்கிளை கோலமாக வரையப் பிரயத்தனப்படுவதைப் பார்த்து வீட்டில் ஏதேனும் பேச்சுவார்த்தை நிகழ்ந்ததா என தெரியவில்லை.
அதற்கடுத்த சில நாட்களிலேயே நீண்ட நாள் கனவு மெய்யானது. 'இந்தா சாவி', என அப்பா கொடுத்தவுடன், வாங்கிய வேகத்தில் வெளியே நிற்கின்ற சைக்கிளை பார்த்த கண்களின் வெளிச்சத்தை இன்று வரை எந்த ஒரு பொருளும் வழங்கியதில்லை. சாவியால் திறந்த வண்டியின் மீது ஏறி, எனக்கே எனக்கான சொந்த வண்டி என்ற பெருமிதத்துடன் முழுத் தெருவையும் சில முறை சுற்றி வந்தேன். அன்றைய தினத்தில் பலமுறை துடைத்து, மேலே தூசி அடையாமல் இருக்க ஒரு துணியால் போர்த்திய சைக்கிளை நினைத்தபடி மிகத் தாமதமாக தூங்கி, அதிகாலையில் எழுந்து ஆசை தீர பார்த்தபடியே பல் துலக்கி, பாடம் படித்து, எழுதி, உணவு உண்டு, ஒரு வழியாகப் பள்ளிக்கு கிளம்பினேன். உடன் படித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம், மதிய உணவு இடைவேளையில் அழைத்துக் கொண்டுவந்து காண்பித்த என் பெருமிதம் அவர்களில் சிலருக்கு பொறாமையை கூட உண்டு பண்ணியிருக்கலாம்.




மாலை பள்ளிக்கூடம் முடிந்த பிறகு, உள்ளே இருந்த மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சி முடிந்த பின்னர் வீடு திரும்புவது வழக்கம். உடன் விளையாடிய மாலாவை, ' என் பின்னால உக்கார்ந்துக்கோ, உங்க வீட்டில இறக்கி விடறேன்', என்றேன். அவளோ,' வேணாம், வேணாம், எனக்கு பஸ் பாஸ் இன்னும் முடியல', என்றாள். கிளம்பும் போது மணியை அடித்துப் பார்த்த மாலா, ' இதே மாடல், இதே கலர்ல நானும் வாங்கப்போறேன் மீரா', என்றாள். சீக்கிரம் வாங்கினால், இருவருக்குமே நல்லது என எண்ணியபடி பெடலை அழுத்தினேன். தனியாகப் பள்ளிக்கு செல்வது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பள்ளியில், மைதானத்தில் நடந்ததை அசை போட்டு பேசி மகிழ மாலா இல்லாதது மனதை வருத்த ஆரம்பித்தது.

ஒரு மாதம் கூட ஆகி இருக்காத நிலையில், ஒரு நாள் காலையில், அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்கையில், சைக்கிளின் பின்னால் உள்ள டயர் பஞ்சர் ஆகி இருந்தது. கிட்டத்தட்ட கண்கள் கலங்க, அருகில் உள்ள சைக்கிள் கடைக்கு பதட்டத்துடன் சைக்கிளை உருட்டிக் கொண்டே வேகமாக சென்றேன். ' புது சைக்கிள், புது டயர், யாரோ வேணும்னே ஊசி வச்சு குத்தி இருக்க மாதிரி இருக்கு', என்றபடி பஞ்சர் ஒட்டித் தந்தார் கடைக்காரர். மிக வேகமாக அழுத்தியபடி, சற்று தாமதமாக பள்ளிக்கு சென்றேன் அன்று. அதற்கடுத்த சில நாட்களில் பள்ளியில் இருந்து கிளம்பும் போது, சாவியைத் துழாவினால், பக்கவாட்டுப் பையில் அகப்படவில்லை. மொத்த நோட்டு புத்தகங்களையும் கொட்டி, பிரித்துப் பார்த்து, தேடியும் சாவியைக் காணோம். கண்களில் தேங்க ஆரம்பித்தது நீர். 'சாவியை பொறுப்பா வச்சுக்காம இப்படியா தொலைப்பாங்க, உங்க வீட்டில சாத்து வாங்க போற', என என்னைத் திட்டியபடி மீண்டும், மீண்டும் பையை சோதனை போட்டாள் மாலா.
' என்னது எதுவும் தொலையாது, அவ்வளவு பத்திரமா வச்சுக்குவேன், இப்போ நான் உயிரா நினைக்கிற சைக்கிள் சாவியை காணாம போட்டத நானே தாங்க முடியாம இருக்கேன் ', என விரக்தியில் சொன்னேன். அதிகரித்த என் முகவாட்டம் அவளுக்குள் பரிவை உண்டாக்கி இருக்கக்கூடும். ' கவலைப்படாதே மீரா, சாவி எப்படியும் கெடச்சிடும்', என்ற அவளின் வார்த்தைகள் வெகு நேரத்திற்கு என்னைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன. வாடிய முகத்துடன், புலம்பியபடி வகுப்பறையிலும், மைதானத்திலும், நடந்து வரும் வழியெல்லாம், தேடியும் விசாரித்தும் கிடைக்காமலே போனது சாவி. என்னுடன் தேடிய மாலா, ஐந்து மணியானதும், கேண்டீனில் காபி வாங்கி குடிக்க செய்து, வீட்டிற்கு செல்ல பயணச்சீட்டிற்குரிய காசை கொடுத்து உதவினாள்.
மாலாவுடன் பேருந்தில் வீட்டிற்கு சென்று மாற்று சாவியை பெற்றுக் கொண்டு, மீண்டும் பள்ளிக்கு வந்து சைக்கிளை எடுத்து சென்றேன். அதன் பிறகு சாவியை மிக கவனமாக பத்திரப்படுத்தி வைக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது மாலாவும் சாவி பத்திரமாக இருக்கிறதா எனக் கேட்டபடி பையை சோதனையிட சொல்வாள். அந்த ஆண்டு முடிவதற்குள் மாலாவும், என்னுடையதைப் போலவே ஒரு சைக்கிள் வாங்கி விட்டாள். அதீத உற்சாகத்துடன், இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே பள்ளிக்கு சென்று வரத் தொடங்கினோம். எங்களுடைய பெரும் கனவான சொந்த சைக்கிள், கைக்கு கிடைத்த மகிழ்ச்சியில், ஊரெல்லாம் சுற்றத் தொடங்கினோம். சாலையில் யார் முதலில் செல்வதில் தொடங்கி, இரண்டு கைகளை விட்டுவிட்டு எவ்வளவு தூரம் ஓட்டி செல்ல முடியும் வரை விதவிதமானப் போட்டிகளை எங்களுக்குள் நடத்திக் கொள்வது, ரசனையாக சென்றன பொழுதுகள். சில நாட்களில் வீட்டிற்கு தெரியாமலே சென்ற சினிமா தியேட்டர், தொலைவில் இருந்த தோழிகளின் வீடுகள், சர்க்கஸ் என நீண்டது எங்கள் சைக்கிள் சக்கரங்கள் உருண்ட பாதைகள். இன்றும் சேமித்து அசைபோடும் பல்வேறு நிகழ்வுகளை சாத்தியப்படுத்தியத்தில் சைக்கிளின் பங்கு முதன்மையானது.

அதற்கடுத்த சில மாதங்கள் கழித்து... ஒரு நாள் மாலா வீட்டில், காபி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருப்பதாக சொல்லியபடி அவளின் அறைக்குள் சென்ற மாலா, கையில் ஒரு சைக்கிள் சாவியுடன் வந்தாள். ' இது நேத்து கோவிலுக்கு போற வழில கெடச்சது மீரா, உன் காணாம போன சாவிக்கு பதிலா இது பூட்டோட பொருந்துனாலும், பொருந்தலாம்னு எடுத்து வச்சேன்', என்றதும், வேகமாக சாவியை வாங்கி வெளியில் நின்ற சைக்கிளின் பூட்டில் நுழைத்துப் பார்த்தால், கச்சிதமாகப் பொருந்தியது சாவி. தொலைந்த சாவி வேறொரு வடிவத்தில் கிடைத்ததைக் கண்டு பொங்கிய மகிழ்ச்சியில், அவள் கைகளைப் பிடித்து பல முறை நன்றி சொல்லியபடி வீட்டிற்கு திரும்பினேன். என்னுடைய அறையில் புதிதாகக் கிடைத்த சாவிக்கு என ஒரு சாவிக்கொத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். மாலா கண்டுபிடித்த சாவியை எடுத்து அதில் ஏற்கனவே இருந்த சிறிய வளையத்திலிருந்து தனியாக கழற்ற ஆரம்பித்தேன். ஏதோ சரியில்லாதது போல ஓர் உணர்வு உள்ளே உதைக்க, சிறிய வளையத்தில் தொங்கிக்கொண்டிருந்த சாவியுடன், அடையாளத்திற்கு என நான் முன்னர் மாட்டியிருந்த மிகச்சிறிய இரும்பு வளையமும் அப்படியே இருந்தது.

புதன், 16 செப்டம்பர், 2015

போக வர ஒன்பது கிமீ...!




போக வர ஒன்பது கிமீ. எடுத்துக்கொள்ளும் தூரத்தை பகல் மற்றும் மாலை நேரங்களில் கடப்பது போலான சூழல் அதிகாலை ஐந்து மணிக்கு இல்லை. வாகன இரைச்சலற்ற சாலை, போகும் வழியெல்லாம் பேசிக்கொண்டே உடன் வரும் சுத்தமான காற்று, மஞ்சள் ஒளியைஅங்கங்கே பூசியபடி வழி காட்டும் சாலை, திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஓரிரு கடைகள், நாளின் முதல் பயணத்தை அமைதியாக துவங்கி நகரும் சில வாகனங்கள் என பிரமாதமாகக் கழிந்தன 25 நிமிடங்கள்.
நிதான வேகத்தில் இருபுறமும் பார்வையை பொறுமையாக ஓடவிட்டு செல்லும் அவசரமற்ற பயணம் தான், பயணம் செய்த திருப்தியைத் தரும் என்பது என் எண்ணம்.
எப்போதாவது, மாலையில், மேகம் கூடி வரும் சமயங்களில், அதிக இடங்களில் மரங்கள் அடர்ந்து வரவேற்கும், நத்தம் சாலையில் சில கிமீ தூரம் வரை சென்று திரும்பவது மனதை பொறுத்து அவ்வப்போது நிகழும். ஆனால் அதிகாலையில் கிடைத்த இந்தப் பயணம், வேறொரு பரிமாணத்தில், எதிர் பாராத மகிழ்ச்சியை அளித்தது.
ஆங்காங்கே ஓரிரு வாகனங்கள் சென்று கொண்டிருந்தாலும், கோர்ட்டிலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் வழியில் வண்டிகளின் எண்ணிக்கை சொல்லும்படி இருந்தன. முதலில் வரும் பூ மார்கெட்டிற்கு அருகில் பகல் போலவே ஆட்களின் எண்ணிக்கை. சற்று தள்ளி இருந்த தேநீர் கடையில் இருந்த கடையின் விளக்குகள், பின்புறம் இருந்த இருட்டால் பளிச்சென்று தெரிந்தன. பேச்சரவமின்றி தங்களுடைய பைகளையும், கூடைகளையும் கக்கத்திலும், பக்கத்திலும் வைத்தபடி சில பெண்களும் தேநீர் சுவைத்துக் கொண்டிருந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு முன்புறம், வெளியூர் செல்லும் உடன்பிறப்பை இறக்கிவிட்டுத் திரும்பும் போது ஒரு காபி குடிக்க தோன்றிய விருப்பம், வீட்டில் காத்துக் கொண்டிருந்த சமையல் வேலையால் உடனடியாக ஒத்திப்போடப்பட்டது.
மீண்டும் வந்த வழியே உருண்டு கொண்டிருந்தன சக்கரங்கள்.
குறைவான போக்குவரத்தால், இன்டிகேட்டர், ஹார்ன் எழுப்பிய கைகளுக்குரிய வண்டி விநோதமாக பார்க்கப்பட்டது போன்ற உணர்வு. (அத்தனை ஒழுங்காக வேலை செய்யும் கைகளாம் :P)
சொல்லியே ஆக வேண்டும்... 300-350 மீட்டர்க்குள், தோராயமாக 20 + 20 கட்டிடங்களின் மத்தியில் நீளும் ஜவஹர் சாலை - நடப்பதற்கோ, வண்டியில் செல்வதற்கோ மிகப் பிடித்தமான சாலை. நான்குவழிப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகளின் தரத்தில் இருக்கும். சாலை ஆரம்பத்திலும், முடிவிலும் இரண்டு வேகத்தடைகள், கொஞ்ச தூரத்தில் சின்ன அளவில் சீரற்ற மேற்பரப்பு, இவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. அதில் இன்னும் மெதுவாக ஓட்டியபடி, நகர்ந்தது வீட்டை நோக்கிய பயணம். சிலர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.அங்கிருந்து பீபீகுளம் தொட்டு செல்லும் வழக்கமான சாலையில் ஊர்ந்து செல்லத் தொடங்கியது வண்டி. வீசிக்கொண்டிருந்த காற்றை ஏகபோகமாக ரசித்துக் கொண்டிருந்த சிலருடன் நானும் இருந்ததில் ஏனோ ஒரு பெருமிதம். வீட்டை அடைவதற்கு சில நூறு மீட்டர் தொலைவிற்கு முன் ஒட்டிக்கொண்டது நிசப்தம். அதன் பிறகு, வளைந்து இடது புறம் திரும்பிய போது ஓரிருவர் வாசலைப் பெருக்க ஆரம்பித்திருந்தனர். வண்டியை நிறுத்தி பூட்டிடும்போது, மனதில் பரவியிருந்த நிறைவை உணர முடிந்தது. உடன் வந்த காற்றின் புத்துணர்வு உள்ளுக்குள்ளும் நிரம்பி இருந்தது. மலர்ந்த அகத்துடனும் தொடங்கிய நாளின் உற்சாகம் நாள் முழுவதும் தொடரும். :)

ஞாயிறு, 14 ஜூன், 2015

பல்லி Vs பூச்சிகள் & பல்லி Vs எறும்புகள்

நேற்று மாலைப் பொழுதில், ஊஞ்சலில் அமர்ந்தபடி பார்த்த வானம் இருட்டவே, பார்வை, சீலிங்கிற்கு சென்றது. மேலே பொருத்தியிருந்த விளக்கிற்கு அருகே மிளகு அளவிலான பூச்சிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட அவை எங்கிருந்து வந்தன எனத் தெரியவில்லை. விளக்கின் வெளிச்சத்தில் அந்த சீலிங்கில் தலை கீழாய் அமர்ந்திருப்பதால் அவற்றிற்கு ஏதோ சுகம் கிடைத்திருக்கலாம் என மட்டும் யூகிக்க முடிகிறது. மெதுவாக பதுங்கியபடி வந்த மூன்று பல்லிகள், வேக வேகமாக பூச்சிகளை விழுங்க ஆரம்பித்தன. நொடிக்கும் குறைவான நேரத்தில் தலையை உயர்த்தி ஒவ்வொரு பூச்சியையும் தின்றன. பூச்சிகளை எப்படி விரட்டலாம் என யோசனை ஒரு புறம், இன்னொரு புறம் பல்லிகளின் ஆகாரம் வேறென்ன என சிந்திக்கையிலேயே பாதி பூச்சிகளின் ஆயுள் முடிந்திருந்தது. சும்மாவாவது பறந்து பறந்து இடம் மாற்றிக் கொண்டிருந்த பூச்சிகள், தப்பிக்க எந்த ஒரு எத்தனமும் இன்றி பல்லியிடம் தங்களை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது போல பரிதாபமாக இருந்தது அக்காட்சி. அடுத்த சில நிமிடங்களில் பூச்சிகள் இருந்த சுவடே இல்லை. 


இன்று உள் அறையில் கதவை ஒட்டி இருந்த சுவரில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. சில எறும்புகள் ஏதோ பூச்சியை உணவாக சுமந்து செல்ல, வரிசையின் முன்னேயும், பின்னேயும் பாதுகாப்பாக எறும்புகள் சென்று கொண்டிருந்தன. ஓரடித் தொலைவிலிருந்து பார்த்த பல்லி ஒன்று மிக மெதுவாக நகர்ந்து வந்தது. ஒரு சில சென்டிமீட்டர் இடைவெளியில் தன் உடலை எக்கி, கண்களால் இரையைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பூச்சியை பறித்து செல்ல முயற்சித்து தோற்று, ஓரடி பின் வாங்கி சென்று மீண்டும் பார்த்தது. எறும்பு கடித்ததோ என்னவோ தெரியவில்லை. வரிசையிலிருந்து பிரிந்த சில எறும்புகள், இரண்டு பக்கங்களிலும் சில சென்டிமீட்டர் தூரம் ஊர்ந்தது பல்லியைத் தேடியா எனத் தெரியவில்லை. சில நிமிடங்களில் அவற்றின் இரையைப் பாதுகாத்தபடி மறைந்து போனது அந்த எறும்புக் கூட்டம். 
# ஏதேதோ சிந்தனையைக் கிளறியபடி இருக்கின்றன இவ்விரு காட்சிகளும்.

வியாழன், 4 ஜூன், 2015

கடல்ல்ல்...

அருவி, குளம், ஏரி என நீர்நிலைகள் அனைத்துமே ஈர்க்கும் இயல்புடையன. குறிப்பாக கொட்டும் அருவியில், நேரம் போவதே தெரியாமல் நிற்கையில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு எல்லையில்லை. ஆனால், இந்த கடல் ஏனோ என்  மனதிற்கு அத்தனை நெருக்கமாக இருந்தது  இல்லை. இன்னும் தெளிவாக சொன்னால், ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சென்றிருந்தோம். சுற்றுலாவில் உடன் வந்தவர்களிடம் இருந்து விடுபட்டு, மிக வேகமாக நான் மட்டும் கடலை நோக்கி  முன்னோக்கி சென்றேன்.வெளிறிய நீலவானத்தை ஒட்டி இருந்த பிரம்மாண்டமான கடல், அலையோசையுடன் வரவேற்று கொண்டிருந்தது. சந்தோஷத்துடன் தொற்றிக்கொண்ட ஆர்வம் வேகமாக கடலை நோக்கி ஓட செய்தது. பக்கத்தில் செல்ல செல்ல, வெளிறிய நீலத்தில் இருந்த கடலின் இரைச்சல்  மனதை என்னவோ செய்தது. சற்று தொலைவில் கரையை ஒட்டியபடி சிலர் கடலில் விளையாடிக் கொண்டிருக்க, நான் சென்ற பகுதியில் கிட்டத்தட்ட எவருமே இல்லை. உடன் வந்தவர்கள் மிகத் தொலைவில் பின்னால்  வந்து கொண்டிருந்தனர். ஏதோ ஒரு வேகத்தில், ஓடி வந்து கொண்டிருந்த அலைகளில் கால் நனைத்தபடி, ஒரே வண்ணத்திலிருந்த வானையும், கடலையும் உற்று பார்த்துக் கொண்டிருந்த கணத்தில், வேகமாக பின்னோக்கியவாறே  மணலில் ஏறினேன். எல்லையில்லாமல் நீண்டிருந்த அதன் விரிந்த பரப்பு, சொல்லவியலாத பயத்தை ஏற்படுத்தியது. என்னை உள் இழுத்துக் கொள்ளும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால், சட்டென கடல் திகிலூட்டியது போல உணர்ந்தேன். அன்றிலிருந்து கடலும், கடற்கரையும் மனதிலிருந்து தூரம் போயின. இத்தனை வருடங்களில் சில கடற்கரைகளில் அமர்ந்திருந்தாலும் உடன் சிலர் இருக்கும் போது மட்டும் அலைகளில் பெயருக்கு காலை நனைப்பேன். மிக குறைவான நொடிகளில் கடலின் மீதுள்ள பார்வையைத் திருப்பும்படியும் பார்த்துக் கொண்டுள்ளேன். இதுதான் காரணம் என்று தெரியாமல் இன்றுவரை விலகி, தூர நின்று, குறைவான நேரத்தில் மட்டுமே இருக்க விரும்பும், கடல் மீதான எனது பார்வை, இனி மாறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்!

செவ்வாய், 26 மே, 2015

கேங்டாக் - டார்ஜீலிங் சுற்றுலா பயணம்



முதன் முறையாக விமானத்தில் சென்னையிலிருந்து கொல்கத்தா பின் அங்கிருந்து மேற்கு வங்காளத்தின் எல்லையில் இருக்கிற பாக்தோராவில் இறங்கினோம். ரயிலில் என்றால், சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலிகுரி என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து நம் பயணத்தை கேங்டாக் நோக்கித் தொடரலாம். டார்ஜீலிங் மாவட்டத்தின் உள்ளே தான் பாக்தோரா என்ற ஊரும், சிலிகுரியும் உள்ளன. நாங்கள் சென்ற மார்ச் ஆரம்பம் ஹாப் சீசன் நேரம்.   

சில மணி நேரங்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு பதிவெண்களுடனான வண்டிகளை பார்த்து பழகிய கண்கள் சடாரென மேற்கு வங்க பதிவெண்களுடன் வலம் வரும் வண்டிகளைக் கண்டு சற்று தடுமாறித்தான் போகின்றன. இணையம் மூலமாக பதிவு செய்திருந்த வண்டியில் ஏறி, 124 கிமீ தொலைவில் இருந்த கேங்டாக் நோக்கி விரைந்தோம். மிக சுமாரான சாலைகள், குறைவான வசதிகள் கொண்ட சாலையோரக் கடைகள் என தமிழகத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருந்த கொல்கத்தாவின் எல்லையோர மாவட்டத்தைக் கடந்து கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து இமயமலையில் ஏற ஆரம்பித்தது வண்டி. மலையின் ஒரு புறம் பாறைகளுக்கிடையே மரங்கள் சற்று நிறம் மங்கி வரவேற்றுக் கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் ஓடிக்கொண்டிருந்த டீஸ்டா நதி, பச்சையும், நீலமும் கலந்த வசீகர வர்ணத்தில் ஓரங்களில் கற்களுடன் ஓடிக்கொண்டிருந்தது. 



ஒரு வழியாக நான்கு மணி நேரப்பயணத்திற்கு பிறகு கேங்டாக் வந்தடைந்தோம். தாளமுடியாத குளிரால் கைகளை குறுக்கேக் கட்டிக்கொண்டு ஊரை வேடிக்கைப் பார்த்தபடி இருந்தோம். பார்க்கின்ற அத்தனை பேரும் ஸ்வெட்டர் அல்லது ஜெர்கின் அணிந்து இருந்தனர். ஜெர்கின் உள்ளேயே கைகளை வைத்திருப்பதன் காரணம் க்ளௌஸ் அணியாததாக இருக்கும். :)
 உணவகங்களுடன் கூடிய மதுபான விடுதிகள் கூடுதலாக தென்பட்டன. நடப்பதற்கான நடைபாதை மிகக்குறைவான இடங்களில் மட்டுமே இருந்தது. 20,30 கி.மீ வேகத்தில் செல்லும் வண்டிகளின் அதிக பட்ச வேகமே 40 கி.மீ தான். அப்பொழுதுதான் கூடுதல் கட்டுப்பாட்டுடன் வண்டியை இயக்க முடியும் என்றார் ஓட்டுனர். அத்தனை நிதானமாக, நேர்த்தியாக வாகனத்தை ஓட்டுகின்றனர். இந்த நான்கு நாட்கள் பயணத்தில் இங்கு புகைப்பிடிப்பவர்களை சந்திக்கவில்லை. ஆனால் பான்பராக் கடைக்கு கடை தொங்கவிடப்பட்டிருந்தது. சரி, அது அந்த ஊர் சிகரெட் என எண்ணிக்கொண்டேன்.

மறைந்து மறைந்து போகின்ற வழியெல்லாம் உடன் வந்து கொண்டே இருந்தது, சீனாவிலிருந்து கிளம்பி ஓடி வரும் டீஸ்டா நதி.

இதே இமயமலையின் இன்னொரு புறத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்ற சிம்லாவில் சாலைகள் மிக நேர்த்தியாக இருந்த நினைவு.

குறுகலான சாலையில் எப்படி லாவகமாக திறம்பட ஓட்டுகிறார்கள் அனைவரும் என தாள முடியாமல் கேட்டதில், ஓட்டுனர் பயிற்சியே இந்த மலையிலுள்ள இதே சாலையில் தான், பத்து நாட்களில் கற்று தேர்வதாக சொன்னார். சூழலே திறமையானவர்களை உருவாக்கிறது. இணையத்தில் பதிவு செய்திருந்த Summit விடுதிக்கு சென்ற பின் அன்றைய இரவு உணவை எடுத்துக் கொண்டு அலுப்பில் உறங்கினோம். 

அடுத்த நாள் காலை வாகனத்தில் கிளம்பிய போது மணி 8.30. ஐம்பத்தைந்தாவது கிமீ தூரத்தில் இந்திய-சீன எல்லையான நாதால பாஸை நோக்கி செல்லும் சாலையில் பயணம் துவங்கியது. எல்லைக்கு முன்பு 17 கிமீ தொலைவில் இருந்த சங்கு ஏரி யைக் காண முக்கிய செக் போஸ்ட் ஐக் கடக்க, எங்கள் புகைப்படங்கள் ஒட்டிய அனுமதி சீட்டை ஓட்டுனர் முதல் தினமே வாங்கி, கையெழுத்து பெற்றிருந்தார். 

மூன்றுக்கும் மேற்பட்ட மரப்பாலங்களை கடந்து மலையில் சென்று கொண்டிருந்தோம். சோதனை சாவடியில் நிறுத்தி, முகங்களை பரிசோதித்தப் பின்னரே வாகனம் செல்ல அனுமதிக்கின்றனர். தூரம் செல்ல செல்ல சாலையின் தரம் மோசமாக இருந்தது. சில இடங்களில் தார் பூசி பல வருடங்கள் ஆகி இருக்கலாம். ஓயாமல் குறை சொல்லிக் கொண்டிருக்கும் நம்மூர் சாலைகளை இம்மக்கள் நேரில் பார்த்தால் கொண்டாடக் கூடும். சில கிலோமீட்டர் இடைவெளிகளில் சில ராணுவ முகாம் தட்டுப்பட்டது போக, அங்கங்கே ராணுவ உடுப்புடன் நடந்து கொண்டிருந்த வீரர்களை அதிகமாகப்  பார்க்க முடிந்தது. 

சற்று வெறிச்சென்ற பள்ளத்தாக்கு ஒரு புறத்தில் மிரட்டினாலும், அங்கங்கு நின்ற மரங்கள் தைரியம் ஊட்டின. மரங்களின் பசுமையின் ஊடே மெலிதாக வெண்மை தெரிய ஆரம்பித்ததை பார்த்த நொடியில் பற்றிக்கொண்டது குதூகலம். சில இடங்களில் இடது புறத்தில் பாறைகளின் மத்தியில், கீழ் பகுதியில் ஓரத்தில் என தண்ணீர் உறைந்து கிடந்தது தெரிந்தது. ஒரு கட்டத்தில் வெண்மையான ஐஸின் ஊடே மெலிதான மரங்களின் பசுமை தெரிய வண்டி சங்கு ஏரியின் முற்பகுதியை அடைந்திருந்தது. இந்தப் பனியை பார்க்கத்தானே இத்தனை தூரப் பிரயாணம் என மகிழ்ச்சிப் பொங்க இறங்கினோம். நூற்றுக்கணக்கில் இருந்த மக்களுக்கிடையே, யாக் எருமைகளும் அதனை ஓட்டிக் கொண்டு  சவாரி செல்பவர்களுடன் சுறுசுறுப்பாக கைக்கூப்பியது சங்கு ஏரி.

ஒரு கிமீ நீளத்தில் பரந்திருந்த சங்கு ஏரியை Tsmoga என்ற பெயராலும் அழைக்கின்றனர். இந்த ஏரி 15 மீட்டர் ஆழம் உடையது. மழை நீர், ஐஸ் உருகும் நீரால் நிரம்பி இருக்கும் சங்கு ஏரியின் பெரும்பான்மையான பகுதி இந்த மார்ச் மாதத்தில் உறைந்திருந்தது. அதன் ஓரத்தில் சில அடிகள் விட்டு இரண்டடி அகலத்தில் நீண்டு சென்ற பாதையும் ஐஸால் மூடி இருக்க, அதன் மீது யாக் எருமையின் மீது அமர்ந்து, ஏரியின் இரண்டு புறங்களையும் ரசித்தபடி சிலர் சவாரி சென்று, திரும்பிக் கொண்டிருந்தனர். ஏரியின் வலது புறத்தில் இருந்து மெதுவாக உயர்ந்து சென்ற மலை முழுவதும் பனித்துகள்களால் நிரம்பி இருக்க, அந்தப் ஐஸ் துகள்களை சேகரித்து ஒருவர் மீது மற்றொருவர் வீசி விளையாடிக்கொண்டிருந்தோம். 

ஐஸில் நடப்பதெற்கென பிரத்யேகமான காலணிகள், கையுறை, ஜெர்கின், தலைக்கு குல்லா என சகலமும் உடன் எடுத்து செல்தல் நல்லது. அவற்றின் வாடகை நாம் அவற்றை இங்கே சொந்தமாக வாங்கிக் கொள்ளும் அளவிற்கு இருக்கும். மிக கவனமாக நடக்காததால் அந்த நேரத்தில் கையுறை அணியாததால் கீழே வழுக்கி விட்டதில் உள்ளங்கையில் சிறிதளவு தோல் பெயர்ந்து வெளியே எட்டிப்பார்த்த சிறிதளவு ரத்தம், குளிர்ச்சி தாங்காமல் உறைந்து போனது. 

அதிக கவனமாக நடந்தபடி ஏரியின் அருகே சென்று உறைந்த நிலையில் இருக்கும் தண்ணீரைப் பார்க்கலாம். நல்ல பரப்பளவில் சற்று சரிந்து மேல் நோக்கி சென்ற அவ்விடத்தில் பலர் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மீண்டும் திரும்பி அந்தப்பாதையின் வழியே யாக் சவாரி செல்பவர்களின் பின்னே நடக்கலாம் அல்லது மேல் நோக்கி கவனமாக ஏறலாம். நாங்கள் கொஞ்சம் ஏறிவிட்டு பின்னர் வந்த வழியே நடந்து வந்து முடித்தோம் எங்கள் வெண்மை நடையை. 

ஏரியின் எதிரில் இருந்த கோவிலின் முகப்பில், ஏரி உருவான ஒரு புனைவுக் கதை எழுதப்பட்டிருந்தது. இந்தக் கோவில் மட்டுமல்ல, சிக்கிம், டார்ஜிலிங் கில் பல இடங்களில் உயரங்களில் நீலம், பச்சை, மஞ்சள்,சிவப்பு என பல வண்ணங்களாலான கொடிகள் உயரமான கம்பங்களில் பறந்து கொண்டிருந்தன. சில இடங்களில் எண்ணற்ற வெண்ணிறக் கொடிகளும் பறந்து கொண்டிருந்தன. புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் இக்கொடிகளை புனிதமாக உபயோகிப்பதாக தெரிவித்தனர். என் பங்கிற்கான கொடியை அந்த இமயமலையில் நட்டு அவர்களுக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன் கொடி நடும் வேலையில் ஈடுபடவில்லை. :P 

அங்கிருந்து 17 கிமீ தூரத்தில் இருந்த பாபா மந்திர்க்கும், இந்தியசீனாவின் எல்லையான நாதலா பாஸ்க்கும், அதிகமாக பனி விழுந்து கொண்டிருந்ததால் வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. சீசன் காலங்களில் கண்டிப்பாக அங்கே செல்ல முடியும். பாபா மந்திர் என்பது இராணுவத்தில் பணிபுரிகையில் காணாமல் போன நபர், பின்னர் பனிக்கு ஊடே கண்டறியப்பட்டுள்ளார். இன்றும் அவர் உயிருடன் இருப்பதாக கருதுகின்றனர். ஹர்பஜன் சிங் பாபாவை எல்லைச்சாமியாக வழிபடும் மக்கள் அங்கே அநேகம். என்றோ ஒரு நாள் அந்தக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் அவரின் காலணியில் ஒட்டியிருந்த சேறு, அங்குள்ளவர்களின் கனவில் வந்து அவர் சொன்ன விஷயங்கள் என ஏராளமான கதைகளை பாபா பற்றி சிலர் சொல்கின்றனர் அவ்வூர் மக்கள். இன்றும், பாபா  நம் நாட்டை, மக்களைப்  பாதுகாத்துக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். 

பனிரெண்டு மணி நெருங்கும் போதே பள்ளத்தாக்குகளில், மேல் நோக்கி சென்ற பனிப் படலத்தைப்  பார்க்க முடிந்தது. இறங்கிக் கொண்டிருக்கையில் இடது புறம் பார்த்தால், சற்று நேரத்தில் பள்ளத்தாக்கு கண்களுக்கு புலப்படாத அளவில் பெரிதாகி இருந்தது பனியின் அளவு. 

வீடுகளின் மேற்கூரையில் விழும் பனி சரிந்து வடிவதற்காக, அத்தனை கட்டிடங்களின் மேற்கூரைகளும், மலையைப் போலவே இரண்டு புறங்களிலும் சரிந்திருந்தன.

நேப்பாளி, ஹிந்தி, பெங்காலி, அதிகமாக பேசுகின்றனர். ஹிந்தியும் ஓரளவு ஆங்கிலமும் தெரிந்திருந்தால், நேரடியாக நிறைய தகவல்களை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். 



அதே தினம் மாலை வேளையில் எம்.ஜி.மார்க் சென்றோம். கிட்டத்தட்ட சிம்லாவின் மால் ரோட்டைப் போல பொருட்கள் வாங்குவதற்கான வீதி. ஓரளவு சமமான நிலபரப்பில் நன்றாக அகன்று இருந்த இந்த சாலையின் இருபுறங்களிலும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட, அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால் விலை 4,5 மடங்கு அதிகம். mamoo மம்மோ என்று சொல்லப்படுகின்ற மைதா மாவின் உள்ளே காய்கறி, கோழிக்கறி உட்பட்ட மசாலாக்களை அடைத்து ஆவியில் வேக வைத்துக் கொடுக்கின்றனர். 50 ரூபாய்க்கு எட்டு என்ற எண்ணிக்கையில் சைவ மம்மோ வாங்கினோம். வித்தியாச சுவையை ரசிப்பவர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும். இந்த மம்மோ இங்கு உள்ள மக்களுக்கு மிகப்பிடித்தமான உணவாக இருக்கிறது. இங்கு மூங்கிலில் செய்யப்பட ஊறுகாய் பிரபலம். அச்சார் என்று அழைக்கப்படுகின்ற ஊறுகாயை அனைத்து தர தேநீர் மற்றும் உணவு விடுதிகளில் பார்க்கலாம்.  எங்கு சாப்பிட்டாலும், மிக மிதமானக் காரத்துடன் இருந்தது உணவு. 

சாலையை இரண்டாகப் பிரித்து நடுவில் செடிகள், ஓரங்களில் அமர்ந்து இளைப்பாற இருக்கைகளும் இருக்கின்றன. மெலிதான சாரலும், குளிரும் இருந்ததால் விரைவாக நாங்கள் தங்கி இருந்த விடுதிக்குத் திரும்பினோம்.

பார்ப்பதற்கு தான் சற்று சீனர்கள் போல தோற்றம் இருப்பது என்பதற்காக நூடில்ஸ், சாய்மீன் என பல் விதமான சீன உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டுமா இவர்கள் ? :P 
பசியாற சப்பாத்தி, சென்னா மசாலா எல்லாம்  நன்றாகவே கிடைக்கின்றன. இட்லி, தோசை, சட்டினி, சாம்பார் எல்லாம் தீவிர தேடுதலுக்குப் பின் அதிக விலையில்  கிடைக்கும். பார்ப்பதற்கும் அப்படியே இருக்கும். ஆனால் சுவை......................... சுவைத்துப் பாருங்கள் :)

இந்த காலநிலையை, சூழ்நிலையை மிக இயல்பாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மக்களின் எவர் ஒருவரின் முகத்திலும் எரிச்சலையோ, கோவத்தையோ, வெறுப்பையோ காணமுடியவில்லை. சத்தமாக பேசியோ, யாரும், யாருடனும் சண்டையிட்டோ பார்க்கவில்லை. அத்தனை சாத்வீகமாக தெரிகின்றனர் பெரும்பான்மையோர் புத்த மதத்தைப் பின் பற்றும் பூமியில் உள்ள இம்மக்கள். சாந்தமான முகத்துடன், எப்பொழுதும் புன்னகை புரிய தயாராய் இருக்கும் உதடுகளின் பின்னணியில், இந்த ரம்மியமான வானிலையும் இருக்கலாம். 

அடுத்த நாள் காலை, 90 கிமீ தூரத்தில் இருந்த டார்ஜீலிங்கிற்கு புறப்பட்டோம்.  கிளம்பி செல்கின்ற வழியில் மிகச்சிறிய திருமண மண்டப அளவில் இருந்தது சிக்கிமின் சட்டமன்றம். ஒன்றரை மணி நேரப்பயணத்தில், நீடித்த மழையால் மெல்லி என்ற இடத்தில் தேநீர் அருந்தினோம்.



 மலைப்பாங்கான இந்தப் பகுதியில் பத்து கிலோமீட்டர் தூரத்தை அடைய அரை மணி நேரம் பிடிக்கிறது. சிக்கிமில் தொடர்ந்த தூறல் வழி எங்கும் பன்னீர் தெளித்துக்கொண்டே வந்தது. மழைச்சாரலில், மரங்களின் அடர் பசுமைப் பின்னணியில் பாய்ந்து ஓடி வருகிற டீஸ்டா நதியைப் பார்ப்பதை எளிதில் வார்த்தையில் வார்க்க முடியாது. முதல் 30 கிமீ வரை துணை வந்த நதியின் வண்ணமும், அழகும் மனம் முழுவதும் நிரம்பி அழுத்தமாக பதிந்துள்ளன. முப்பது கிலோமீட்டர் கடந்த பின் நீண்டு தொடரும் சாலையில் இடது புறம் பிரிந்து ஏறுகிறது, டார்ஜீலிங் செல்வதற்கான மலைப்பாதை.

மலைப்பிரதேசத்தில் ஓங்கி உயர்ந்த மரங்கள் சூழ மழையுடன் பயணம் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. சில இடங்களில் முற்றிலும் பனி மூடியிருக்க, எதிரில் வருகிற வண்டி சரியாக தெரியாமல், மெல்லிய வெளிச்சத்தில், மிக மெதுவாக இயக்கப்பட்ட வண்டியின் உள்ளே இருந்து, ஆகாயத்தில் தொட முடியாதப் பனியை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். மீண்டும் பனியற்ற சாலையிலும் தொடர்ந்து பின் வந்தது மழை. இந்த மழையிலும் குடையைப் பிடித்தவாறே பள்ளிக்கோ, வேலைக்கோ, கடைகளுக்கோ சென்று கொண்டு வெகு இயல்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க முடிந்தது. 

உயர உயர செல்கிறோம். குறுகிய சாலைகள், பாதுகாப்பற்ற விளிம்புகள் பல இடங்களில், சில இடங்களில் நெட்டுக்குத்தலான சாலை இருந்தாலும் அத்தனை ஓட்டுனர்களும் மிக சாமர்த்தியமாக 
வண்டியை செலுத்துகின்றனர். 

டார்ஜிலிங்கில் மக்கள் அதிகம் புழங்கும் சரிவான சில  இடங்களில் தார் சாலைகளை அமைக்கும் போதே, அதன் மீது வரிசையாக, சில அங்குல இடைவெளியில் நேர்த்தியாக சிறிய அளவிலான கற்களை அடுக்கி சொரசொரப்பாக்கி இருந்தனர். இந்த சாலைகள் வண்டிகள் செல்கையில், மற்றும் மக்கள் நடக்கும் பொழுது பிடிமானத்திற்காக என்றனர். இங்கு சாலைகள் எந்த குறையும் சொல்ல முடியாதபடி இருந்ததையும் குறிப்பிட வேண்டும். 

1.10 க்கு டார்ஜிலிங் வந்து அடைந்த பின்னும், தொடர்ந்த மழையை வெளியே நிற்க சொல்லிவிட்டு, தங்கும் விடுதியில் எங்கள் பைகளை வைத்துவிட்டு, மதிய உணவிற்கு பின் சுற்றிப் பார்க்க வர சொன்ன வண்டி 2 மணிக்கு வந்தது.   

டார்ஜிலிங்கில் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களில் பலவும், சில கிலோமீட்டர் பயண தூரத்திலேயே இருக்கின்றன. தூவானமாக தூறிக்கொண்டிருந்த துளிகளில் சிலவற்றை மேலே வாங்கிக்கொண்டு மிருகக்காட்சிச் சாலைக்குள் நடக்க ஆரம்பித்தோம். முன்னால் சென்றதும் பலவிதமான பறவைகள் அடங்கிய பெரிய கூண்டைப் பார்த்தோம். சில அடிகள் நடந்ததும் வேண்டும் என்றால் ஏறி செல்ல வசதியான படிக்கட்டுகள், அதை ஒட்டி சாய்வான மேல் நோக்கிய சாலையுமாக சென்றது பாதை. இடது ஓரத்திலே வரையாடுகள் இருந்தன. வலது புறம் திரும்பி மேலே ஏறினால், சிவப்பு பாந்தா கரடிகள், மரங்களுக்குள் ஏறி விளையாடுவதைப் பார்க்கலாம். உள்ளே இருந்த புலி உட்பட்ட பல்வேறு மிருகங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும்.

அங்கிருந்து கிளம்பிய ஐந்தாவது நிமிடத்தில் ரோப் காரில் சென்று திரும்பும் இடத்தில் இருந்தோம். அந்த சாலையின் இடது புறம் கீழே இருந்த மிகப் பெரிய பள்ளியில் நேபாள, பூட்டான் மன்னர் பரம்பரைக் குழந்தைகள் தங்கிப் படிப்பதாக ஓட்டுனர் கூறினார். அங்கிருந்து வலது புறம் சில அடிகள் மேல் நோக்கி ஏறினால் வருகிறது டிக்கெட் கௌண்டர். ஒரு நபர்க்கான பயண சீட்டின் மதிப்பு 150 ரூபாய். கிட்டத்தட்ட 5 கிமீ தூரத்தை, நாற்பது நிமிடங்களில் ரோப் கார் உள்ளே இருந்தபடி, டார்ஜிலிங் அழகை பறவைப் பார்வையில் தரிசிக்கலாம். விடாமல் துரத்திய மழைத்துளிகளை இன்னும், இன்னும்  வாங்கிக்கொண்டே, உள்ளே சென்று அமர்ந்தோம். மேலே ஓரத்தில் இருக்கும் சக்கரம் சுழல, சுழல கரகர சத்தத்துடன் அருகே வந்தது நாங்கள் ஏற வேண்டிய கேபின். ஒரு கேபினில் ஆறு பேர் வரை மட்டுமே அமரலாம். தடதடவென்ற சத்தம் கார் கிளம்புகின்ற இடத்திலும், சுற்றி வளைந்து திரும்பும் இடத்தில் மட்டுமே காதை பதம் பார்க்கும். காரில் நிஜமாகவே பறக்க முடிவது ரோப் காரில் மட்டுமே. :)



சில நிமிடங்களில், ஓரத்திலிருந்த பள்ளி, வீடுகளில் இருந்த சிறுவர்கள் டாட்டா காட்டியது மறைய, கீழே தேயிலைத் தோட்டம், அங்கங்கே மூங்கில் உட்பட சில மரங்கள் இடையே நகர்ந்து கொண்டிருந்த பனி சற்று தொலைவில் சூழ்ந்திருந்த இமயமலைத் தொடர் என கண்களுக்குத் திகட்டத் திகட்ட விருந்தை அளித்துக் கொண்டிருந்தது ரோப் கார் பயணம். சாதாரண நாட்களில் காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை இயங்கும் ரோப் கார் சீசன் காலங்களில் 10 லிருந்து 2 மணி வரை மட்டும் செயல்படும். 

கண்ணாடி வழியாக பார்வையை எத்திசையிலும் சுழல விட்டாலும், முழுதும் பருகிட முடியாத பேரழகு பூமியாக டார்ஜீலிங் மிளிர்கிறது. கிளம்பிய இடத்திலேயே இறக்கிவிடப்பட்ட பொழுது மணி நான்கை தாண்டி இருந்தது. தாங்க முடியாத குளிர் அருகே இருந்த தேநீர் கடையை நோக்கி விரட்டியது. இங்கு ஒரு செய்தியை அவசியம் பகிர்ந்தே ஆக வேண்டும், பால் உட்பட பலவும் பாலீத்தீன் கவர்களுக்கு மாற்றாக அட்டைப்பெட்டி, காகிதப்பைகளில் வழங்கப்படுகிறது. பெயரளவில் இல்லாமல், பாலீத்தீன் பைகளுக்கு எதிராக திறம்பட செயலாற்றுகின்றன சிக்கிம், மேற்குவங்காள அரசுகள்.

அடுத்த சில நிமிடங்களில் இருந்த Tenzing Hill Rock, என்ற சிறிய குன்று போன்று இருந்ததைக் காட்டி, இங்குள்ள மலையில் ஏற பயிற்சி எடுப்பவர்களுக்கான இடம் என்று சொல்லப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் சென்ற தேயிலைத்தோட்டத்திலிருந்து தொலைவில் வெள்ளியை உருக்கி வரைந்தது போல தனியாகத் தெரிந்த மலையை கஞ்சன்ஜங்கா என்றனர். ( அடுத்த நாள் காலையில் ஐந்தரை மணிக்கு டைகர் ஹில் சென்றால், அங்கு காணும் சூரியோதயம் அற்புதமாக இருக்கும் என திட்டமிட்டும், பனி அதிகமாக இருந்ததால் அத்திட்டம் ரத்தானது. அடுத்த நாள்,  நாங்கள் தங்கி இருந்த விடுதியின் கண்ணாடி ஜன்னல் வழியாக தெரிந்த அந்த சிகரத்தில் சூர்யோதயத்தின் காட்சி அத்தனை அற்புதமாக இருந்தது )  

சில நிமிடங்களில், இறக்கி விடப்பட்ட சாலை ஓரங்களில் சில தேநீர் கடைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. தேநீர் குடிப்பதுடன், வீட்டிற்கு தேவையான தேயிலைத் தூள் அடங்கியப் பொட்டலங்களை வாங்கிக் கொள்ளலாம். அதன் பின்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு சென்றது தேயிலைத் தோட்டம். எத்தனையோ வருடங்களாக, எண்ணற்றவர்களை பார்த்துக் கொண்டிருந்த அந்தச  செடிகளை கைகளால் வருடினேன். அட்டைப் பூச்சி இருக்கலாம், கவனம் என அறிவுறுத்தியதை திரும்பிப் பார்த்தபடி யோசித்தேன், நாளெல்லாம் இத்தோட்டத்தில் பணிபுரிபவர்கள் எத்தனை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இருட்டத் துவங்கிய நேரத்தில் ஜப்பானியர்களின் புத்த கோவிலை அடைந்திருந்தோம். (அம்மக்கள் கோவிலை பகோடா என்ற அழைக்கிறார்கள்). அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாட்டில் சில நிமிடங்கள் கலந்து கொண்டு, வெளியே வந்தால், சிலபடிகள் மேல் நோக்கி செல்ல, அங்கு அழகிய பின்னணயில் ஸ்தூபி (சமாதி) அழைக்கிறது. கிட்டத்தட்ட பற்கள் நடுங்கிக் கொண்டிருக்க, குளிரின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. நாக்கு தடிமனாகிப் போன உணர்வு. வேகமாக ஓடி வந்து வண்டியில் ஏறினோம். 

இங்கும் கூட கேங்டாக் போலவே காந்தி மார்க் இருக்கிறது. அதே போல அதிக விலை. அதற்கு பதிலாக, பொருட்கள் வாங்குவதற்காக லேடன் லா ரோடு, நிதானமான விலையைக் கூறும் கடைகளால் நிரம்பி இருக்கிறது. ஸ்வெட்டர், சால், உள்ளிட்ட குளிர்ப்ரதேசத்திற்கு தேவையான ஆடைகள் நிறையக் கிடைக்கின்றன. தேயிலைத்தூள் பெட்டிகளும் வாங்கிக் கொள்ளலாம். சுர்பி என்று சொல்லப்படுகிற மிட்டாய் யாக் எருமையின் பாலில் தயாரிக்கப்பட்டதாகும். இங்கும், அம்மிட்டாய்களைப் பல கடைகளில் பார்க்க முடிந்தது. அவ்வூர் மக்கள், விரும்பி வாங்கி செல்வதையும் காண முடிந்தது. 

அடுத்த நாள், காலையில் கிளம்பி வரும் வழியில் இருந்த பூங்காவிற்கு சென்றோம். அந்த வழியில் உள்ள க்ஹூம் (Ghoom) , மிக உயரமான இடத்தில் அமைந்த ரயில்வே ஸ்டேஷன் ஆகும். கீழே வந்தப் பூங்காவின் பெயர் படேசியா லூப். அந்தப் பூங்காவிற்குள் 3,4 பெட்டிகளை மட்டுமே கொண்ட குட்டி மலை ரயில் நேரோ கேஜ் பாதையில் ஓடிக் கொண்டிருந்தது. மீண்டும் கீழே வரும் ரயில் சாலையை ஒட்டி சென்றது. அங்கு தான் ஆராதனா ஹிந்திப் படத்தில் வரும் புகழ் பெற்ற பாட்டு படமாக்கப்பட்டதாக தெரிவித்தனர். மையத்தில் ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத் தூண் இருந்தது. வழக்கமான பூங்காக்களைப் போலவே பசுமையுடன் காட்சியளித்ததுடன் அங்கிருந்த டெலஸ்கோப் உபயோகித்து மலையை உற்று நோக்கலாம். அங்கு இருந்த நினைவுத் தூண் சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு போர்களில் இறந்த கூர்க்கா ராணுவவீரர்களின் தியாகத்தின் அடையாளமாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்திலும்  நிறுவப்பட்டு இருக்கிறது.

கீழே இறங்க இறங்க, இமயமலை தூரம் சென்று கொண்டே இருந்தது. மரங்களும், குளிர்ச்சியின் அளவும் குறைய ஆரம்பித்தன. மழை, பனி இல்லாமல், மிதமான சூரிய ஒளியில், வளைந்து வளைந்து இறங்கிய வண்டி மூன்று மணி நேரத்தில் பாக்தோரா ஏர்போர்ட் வந்தடைந்தது. 

முதல் தடவை சென்றால், மேலே ஏறுகையில்  அவசியம், எலுமிச்சை உள்ளிட்ட புளிப்பான பழங்கள் அல்லது மிட்டாய்கள் கை வசம் வைத்துக் கொண்டிருந்தால், இம்மலைப்பாதைப் பயணத்தை எளிதாக ஏற்க மறுக்கும் உடல் நிலையை வசப்படுத்தலாம். பின்னர் என்ன, ரசிக்கும் மனதுடன் உடலும் இணைய வாழ்வின் மறக்க இயலாத பயண அனுபவத்தைப் பெறலாம். வெண்மை நடையும், பறவைப்பார்வையும் அளிக்கும் உற்சாகம் நிச்சயமாக நம் மனதை புதுப்பிக்கும்.

(கேங்டாக் - டார்ஜீலிங் சுற்றுலா பயணம் குறித்து, கடந்த 17.5.2015 அன்று தீக்கதிர் - வண்ணக்கதிரில் வெளியான 'பருந்துப் பார்வையோடு வெண்மை நடை'... )

புதன், 18 மார்ச், 2015

பெங்காலி மாதிரியா தெரியுது?

கடந்த சில நாட்களுக்கு முன் சென்ற சுற்றுலாவில், கேங்டாக்கிலும், டார்ஜீலிங்கிலும், கடைகளில் ஏதேனும் பேச ஆரம்பிக்கும் போது, ஹிந்தி ஆங்கிலத்தை தவிர்த்து நேரடியாக பெங்காலியில் என்னிடம் பதில் சொல்லவோ, விளக்கவோ ஆரம்பித்தனர். என் பதிலைக் கேட்ட பின்னர் தான் பொதுவாக, ஆங்கிலத்திற்கோ, ஹிந்திக்கோ மாறும் உரையாடல் தொடர்ந்தது. இது போன்ற ஓரிரண்டு நிகழ்வுகள், சென்னையில் நாங்கள் இருந்த பொழுதும் நிகழ்ந்தது உண்டு.  அதிலும் சிக்கிமில் ஒரு உணவு விடுதியில் வங்காள மொழியில் பேசிய மேலாளர் நான் மதுரை என சொல்லியதை சந்தேகம் முழுக்க அகலாத விழிகளுடன் இறுதியில் ஏற்றுக் கொண்டார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கொல்கத்தா விமான நிலையத்தில் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழலில் அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றேன். முகம் அலம்பியபடி மூன்று பெண்கள் பேசிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த வாஷ் பேசின்களில் இருந்து சில அடிகள் தொலைவில் இருந்த கதவை நோக்கி சென்ற பொழுது, அதன் அருகே தரையை துடைத்து விட்டுக் கொண்டிருந்த பெண்மணி, புன்னகை பூத்த முகத்துடன் என்னவோ சொன்னார். அரையடிக்கும் மேலே ஆரம்பித்த அக்கதவின் கீழே சோப்பு நுரையாக இருந்தது. ஒரு வார்த்தை கூட புரியாத அந்த வசனத்தில், நானாக யூகித்தது, அதன் உள்ளேயும் கழுவி விட்டுவிடுகிறேன், சற்று பொறுக்கவும் என. ஓரிரு நிமிடத்தில் மீண்டும் அந்தப் பெண்மணி, உள்ளேயும் சுத்தம் செய்துவிட்டு அதே பெங்காலியில் ஏதோ என்னிடம் சொன்னாள். இப்பொழுது போகலாம் என அவள் சொல்வதாக சுயமாக மொழி பெயர்த்து உள்ளே சென்ற நொடியில், முகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி தமிழில், ' பார்த்தியா, தெரியாம நாம உள்ள போனதும், நம்ம கிட்ட இந்த பொம்பளை என்னா கத்து கத்துச்சு, இவங்க ஆளுகனதும் எப்படி அமைதியா பேசுது, என்று தொடர்ந்தவளுக்கு 'அவங்கவங்க ஊர்ல இருந்தா அவங்கவங்களுக்கு கிடைக்கிற மரியாதை தனி தான்', என இன்னொருத்தி சொல்லிக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே வெளியே வந்தவுடன், ' நான் மதுரைக்காரி', என சொல்ல நினைத்து அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். பதிலுக்கு குழப்பத்துடன் புன்னகைத்தபடி, முகத்தை சரி செய்தவரை போதும் என வேகமாக கிளம்பி வெளியேறினர். சற்று பெரிய கண்கள், எடுப்பற்ற மூக்கு, படர்ந்த முகம் இவர்களை குழப்பி, என்னிடம் வங்காளத்தில் உரையாட வைத்திருக்கலாமோ... என்னவோ... :)

செவ்வாய், 3 மார்ச், 2015

உதிர்ந்த உதறல்

ஓடுதளத்திலிருந்து மிக மெதுவாக கிளம்பி, நினைத்துப் பார்த்திராத வேகத்தைக் கூட்டி ஓட ஆரம்பித்த விமானம், தரையை விட்டு மேல் நோக்கி சற்று சாய்வாக ஏற ஆரம்பித்தது. அதுவரை இருந்த விமானப் பயணம் குறித்த பயம், திகில் கலந்த வியப்பாக மாறிய நொடியில், உற்சாகம் பொங்க 'ஹே' என உரக்கக் கூச்சலிட்ட நாங்கள், சுற்றி அமர்ந்திருந்தவர்களின் முதல் பயணத்தை நினைவு கூர்ந்திருக்கலாம். மேலே எழும்பிக்கொண்டிருந்த விமானத்தின் உள்ளிருந்து,  கீழே தெரிய ஆரம்பித்த சென்னையில் இருந்த கட்டிடங்கள், வீதிகள் எல்லாம் சிறியதாகிக் கொண்டே வர, சில நிமிடங்களில் கண்களுக்கு தெரிந்தது அழகான சாட்டிலைட் வியூ. சிறிது நேரம் காதுகள் அடைப்பது போலவும், நாக்கு வித்யாசமான சுவையை உணர்வது போலவும் இருந்தது. 

சில மாதங்களுக்கு முன், சென்னையிலிருந்து கொல்கத்தா, பின் கொல்கத்தாவிலிருந்து பாக்தோரா வரை முதன் முறையாக விமானப் பயணம் செய்ய பதிவு செய்திருந்தோம். அன்றே அங்கிருந்து கேங்டாக் வரை தரை வழியாகப் பயணம், இரண்டாவது நாளும் சிக்கிம், மூன்றாவது நாள் டார்ஜிலிங், நான்காவது நாள் மீண்டும் பாக்தோரா, கொல்கத்தா வழியாக சென்னைக்கு  விமானப்பயணம். நேற்றிரவு பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் கிளம்பி, இன்று காலை மதுரை.

விமானத்தின் உள்ளே அருந்தத்தரப்பட்ட குடிநீரை, பழச்சாறு இல்லை என்பதால் மறுத்து வேடிக்கைப்பார்த்தபடி வந்த கொஞ்ச நேரத்தில் மேகங்கள் கீழேயும், மிக அருகேயும் இருப்பதை பார்க்க முடிந்தும் தொட்டுப் பார்க்கவே முடியாத சூழல். இலேசான, சிறிய, அடர் வெண்மை, உருவமற்ற, மிகப்பெரிய, தொடர்ச்சியாக நீளும் என விதவிதமான மேகங்களின் அருகிலேயே சென்றோம். கணக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மேகக்கூட்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்க, சில நேரங்களில் ஒரே இடத்தில் விமானம் நிற்கிறதோ என சந்தேகப்படும்படியான உணர்வு இருந்தது. மேகங்கள் மறைய, சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது நிலப்பரப்பு.

விமானத்தின் உள்ளே பலரும் கண்கள் மூடி அமர்ந்திருந்தனர். பாட்டு கேட்கலாம் என ஐபாட் ஐ இயக்கிக் காதில் வைத்தால், முன் தினம் வரை பல முறைக் கேட்ட, 'ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா' பாட்டு. எத்தனையாவது முறையோ கேட்டபடி, ஜன்னலோரம் பார்த்தால், கடல் கீழே இருப்பது தெரிந்தது. கடலை ஒட்டி நீண்டக் கோட்டை பல நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பார்த்தேன். பிரிக்கும் கோட்டின் ஒரு பக்கம் கடல், இன்னொரு பக்கம் நிலம்.  பள்ளி நாட்களில், அந்த வகிட்டின் மேலே நீல ஸ்கெட்ச் உபயோகித்து வரைந்த கோடு, வங்காள விரிகுடா மீது பென்சிலால் நிரப்பிய வண்ணம் என நினைவில் வந்தது. அதனை ஒட்டிய நிலப்பரப்பு வயலட் நிறத்தில் சிறிதளவு மட்டுமே தெரிய அங்கே நீண்டு சென்ற வெண்மையை ஒத்த நிறமுடைய மிகச்சிறிய பரப்பைத் தாண்டி கடல் நீலத்திலேயே விரிந்த வானத்தின் பிரம்மாண்டம் மிரட்டியது. 

பாடபுத்தகத்தில்,செய்திகளில், இணையத்தில் வரைபடமாக பார்த்த நிலப்பரப்பை நேரில் பார்க்கும் போது அனுபவித்ததை, விவரிக்க இயலாத மகிழ்ச்சியில் மனம் ஆழ்ந்திருந்தது. ஒரு மணி நேரம் கடந்த பிறகு அங்கங்கே கீழே மிதந்து கொண்டிருந்த சிறிய மீன்கள் போன்றவை கப்பல்கள் என புரிந்தது. 

மீண்டும், சீட் பெல்ட் அணிந்து தயாராக அறிவுறுத்தப்பட்டோம். கீழே கட்டிடங்களுக்கு இணையாக பசுமையான நிலப்பகுதி, அது வரை நீல வண்ணத்தை அதிகமாக உள் வாங்கிக்கொண்டே வந்த கண்களுக்கு, மாற்றாக இதமளித்தது. விமானம் கீழே இறங்க, நகரம் பெரிதாகிக் கொண்டே வர, கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் மரங்கள் இருப்பது தெரிந்தது. அதிகமாக தென்பட்டது தென்னை மரங்கள். 

ஏறும் போது தெரியவில்லை. ஏதோ ஒரு உயரத்திலிருந்து பொத்தென்று படுவேகத்தில் இறக்கப்பட்டதாக உணர்ந்த நொடியில், ஏற்பட்ட கலக்கத்தின் ஆயுள் சில நிமிடங்கள் மட்டுமே. மிக மெதுவாக இறங்கி, தரையைத்தொட்டு, சிறிது தூரம் சென்று நிற்க இரண்டு மணி நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்திருந்தோம்.

விமானப்பயணம் குறித்து அதுவரை உள்ளே இருந்த உதறல், உதிர்ந்து விட்டிருந்தது. :)

புதன், 18 பிப்ரவரி, 2015

தமிழ் கற்கவும் உதவும் டிவி

ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்காமல் உடைந்து கிடக்கும் பலூன்கள் ஊதப்படாமல் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ' வேணாமா? அப்படியே வச்சிருக்க? ' என்றதும் 
' எனக்கு சரியா வரல, ' என்றான் வருண். ஏதேனும் வேலை பார்த்திருப்பானோ என்ற சந்தேகத்தில்  ஓட்டை இருக்கிறதா என பலூன்களை ஆராய்ந்தேன். குறையில்லாமல் இருந்தது. எடுத்து ஊத ஆரம்பித்தபோது தான் தெரிந்தது, கடைசியிலிருந்து உப்பி வராமல், ஊதும் இடத்திலிருந்து விரிவாகி லேசாக குறுகி மீண்டும் பெரிதாகி சிறுத்து என நீண்டு முடிந்தது பலூன். ஒவ்வொரு சிறிய பகுதியும் பெரிதாக பெரிதாக, 
' பிரம்மாதம், 
அற்புதம், 
வாழ்த்துக்கள், என்று குதூகலித்து உச்சரித்தபடி கைதட்டிய வருண், இறுதியில் 
'நீங்க சாதிச்சிட்டீங்க' என்றான். தமிழ் படிக்கத் திணறி திட்டு வாங்குபவன் பேசியதைக் கேட்டு,  கட்டுப்படுத்திய சிரிப்புடன் சற்றே யோசித்தேன். பிறகே தெரிந்தது அவன் தொடர்ந்து டிவியில் பார்க்கும் நிஞ்சா ஹட்டோரி, டோரேமான், போன்ற கதாப்பாத்திரங்களில் இருந்து கற்றது என. எப்படியோ நல்லபடியாக தமிழ் கற்று கொண்டால் சரிதான். :)

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

14.2.15- மதுரை மேலமாசி வீதியில்.. மாலை சில நிமிடங்கள்....


சென்ற சனிக்கிழமை மேலமாசி வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருந்தோம். 
கோவிலின் உள்ளே இருந்த கருவறையில் மூலவர், வெளியே அமர்ந்திருந்த உற்சவர் என இரு சிலைகளும் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை கடந்த பார்வை அருகில் இருந்த சிலையின் கண்களில் கூடுதல் நேரம் விழுந்தது. பக்கத்திலேயே பாதியாக உடைக்கப்பட்ட தேங்காய்களில் நிரப்பப்பட்டிருந்த நெய்யில் எரிகின்ற தீபம், அவ்விடத்தை கூடுதல் பிரகாசமாக்கியது. வீரமணி பாடிய இருமுடி தாங்கிப் பாடல் இன்று வரை விருப்பத்திற்குரிய பாடலாக இருந்தாலும், சிறு வயதிலிருந்தே கேட்டு வந்த கதைகளால் ஐயப்பன் சிலையிடம் கூட ஒதுங்கியே இருந்திருக்கிறேன். பொற்றாமரைக் குளத்தின் படிக்கட்டுகளில் எப்பொழுதாவது, அமர்ந்தபடி மீனாட்சியிடம் ஒரு வழிப்பாதையில் நடத்தும் உரையாடலே போதுமானதாக இருந்ததால், மற்ற கோவில்களுக்கு அவ்வளவு சென்றதில்லை. 

இருமுடி கட்டி செல்பவர்களின் கூட்டம் அதிகமாகவும், சிறிய பரப்பளவில் கோயில் இருந்ததாலும், வெளியே உள்ள டீ கடை அருகில் நானும் வருணும் நின்றிருந்தோம். ஓரிருவர் மட்டுமே அந்தக் கடையின் முன் நின்று கொண்டிருந்தனர். கடையின் இடது மூலையின் ஓரத்தில் தொங்க விடப்பட்டிருந்த அட்டையில் காபி, டீ விலை ரூபாய் 20 என்றும், ஒன் பை டூ ரூபாய் 18  எனவும் இருந்தது. ஒன் பை டூ கிடையாது என்பதை இப்படியும் சொல்லலாம் போல.

ஒரு வழி போக்குவரத்தாக மாற்றப்பட்டிருந்த மாசி வீதி, வாகனங்கள் ஓரங்களில் நிறுத்தப்பட்டு, நடைபாதையில் நின்று நிதானமாக வேடிக்கைப் பார்க்கும் படி இருந்தது. பாவம் போல வீசிக்கொண்டிருந்த காற்று தன்னாலான தூசியை சுமந்தே வந்தது. சில அடிகள் தொலைவிலிருந்த மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் எக்கச்சக்கமான அரசியல் கூட்டங்கள் நடந்துள்ளன. இன்னும் எத்தனைக் கூட்டம் நடத்தினாலும் இப்படித்தான் இருப்போம், என மற்ற சாலைகளைப் போலவே பரிதாபமாக இருந்ததை, அந்த  மற்ற சாலைகள்  வரவேற்குமோ என்னவோ  :P . 

கோவிலின் உள்ளே இருந்து வந்த ஒருவர் ஓரடி உயரமுள்ள தூக்கு வாளியில் இருந்த சர்க்கரைப் பொங்கலை கரண்டியில் அள்ளித் தர, அருகில் இருந்தவர் சிறிய காகிதத் தட்டில் பெற்று கோவில் வாசலில் நின்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே வந்தார். நெய் மணம் தூக்கலாக வந்த அந்தப் பொங்கல் தட்டை வருண் வாங்கினான். புளியோதரை என்றால் நானும் வாங்கி இருப்பேன். 

சரியாக கோவிலுக்கு நேர் எதிரே வெளியே நின்ற நபர் கையை மேலே ஓங்கினார், கீழே சிதறிய பிறகு தான் தெரிந்தது அவர் கைக்குள்ளே அடங்கி இருந்தது  ஒரு தேங்காய் என. தேங்காய் விலை கூடியதால் இப்படி ஒரு கைக்கு அடக்கமான அளவு போல. உடைந்து கிடந்தது புழுதியில் என்பதால் யாரும் எடுத்த மாதிரி தெரியவில்லை. கோவிலுக்கு செல்பவர்களை வழி அனுப்பிவிட்டு, வருணை முன்னால் உட்கார செய்து, வண்டியை முடுக்கிய பின் பார்த்தால், மங்கிய ஒளியில் வேகத்தைக் காட்டிய  மேற்பகுதி  மீது பெயர் எழுதி விளையாடும் அளவிற்கு புழுதி படிந்திருந்தது. 

வியாழன், 8 ஜனவரி, 2015

கயல்

வழக்கம் போல ரசிக்கும்படியான நகைச்சுவை முதற்பாதியில் தாராளமாக அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. ஊர் சுற்றி ரசிப்பதில் கிடைப்பவற்றை எளிய மக்களுக்கும் புரியும்படி விளக்கும் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது. இது தான் க்ளைமாக்ஸ் என முடிவு செய்துவிட்டு வலிய நகர்த்திக் கொண்டு போவதை போல இருந்தது கயல் படத்தின் பிற்பாதி. பிரபு சாலமனின் முந்தைய இரண்டு படங்களைப் போல காதலர்கள் இறந்தோ, பிரிந்தோ போகவில்லை. சேது படத்திற்கு பிறகே (என் அறிவுக்கு எட்டி), துயர முடிவை வரவேற்க நம் மக்கள் பழகிக் கொண்டார்கள். அத்தகைய படங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்ததாக நினைவு. ஒரு வேளை இந்தப் படத்திலும் அப்படி ஒரு முடிவு இருந்திருந்தால், சகல தரப்பினரும் உச்சி முகர்ந்து பரவலாக கொண்டாடி இருப்பார்களோ தெரியவில்லை. 

பெற்றோரை இழந்த சிறு குழந்தையை, வளர்க்கும் அந்தப் பெண்மணி, எந்த தைரியத்தில் கயலை கன்னியாகுமரி நோக்கி அனுப்பி வைக்கிறாள் என தெரியவில்லை? மனதிற்கு பிடித்த ஒரே ஒரு பார்வை, ஒற்றை வாக்கியம் மட்டுமே உதிர்த்தவனை, அடுத்த நொடியில் இருந்து முழுமையாக மனதில் சுமப்பதை ஏற்க முடியவில்லை. பதின்பருவத்தில் இது சகஜமாக இருக்கலாம் என யோசித்தால் மட்டுமே  விட்டுவிடலாம். ஆரோன் & சாக்ரடீஸ்க்கு, விளையாட்டுடன் கூடிய சாமர்த்தியம், அறிவு, தெளிவு என அத்தனையும் குவிந்திருப்பதாக முதல் சில காட்சிகளில் நம் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். இதைப் பயன்படுத்தி அந்த பிற்போக்கு கும்பலிடம் இருந்து எளிதாக தப்பித்து, வேறு மாதிரி பயணப்பட்டிருக்கலாம் கதை என தோன்றுகிறது. நேர்த்தியான ஒளிப்பதிவில், படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் அழகான பிரதேசம் குளிர்ச்சியூட்டி மகிழ்விக்கின்றது. இறுதியில் வரும் சுனாமி காட்சி அரட்டுகிறது. இத்தனை பரிதாபமான, ஏமாளியான, எதையும் யோசிக்காமல் செயல்படுத்துகிற கயல் மீது, அதீத எதிர்பார்ப்புடன் போனதாலோ என்னவோ அனுதாபம் மட்டுமே வருகிறது.